திருவுசாத்தானம் (கோயிலூர் - கோவிலூர்) திருக்கோயில் தல வரலாறு

திருவுசாத்தானம் (கோயிலூர் - கோவிலூர்) திருக்கோயில் தல வரலாறு
Sthala puranam of Thiruusathanam Temple


இறைவர் திருப்பெயர்  : மந்திரபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்  : பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல மரம்   : மா.
தீர்த்தம்    : அநுமன் தீர்த்தம், மாக்கண்டேய தீர்த்தம், 
      கௌதம தீர்த்தம்.
வழிபட்டோர்   : இந்திரன், வருணன், விசுவாமித்திரர், இராமர், 
      இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன், அநுமன் முதலியோர்.
தேவாரப் பாடல்கள்  : சம்பந்தர் - நீரிடைத் துயின்றவன் தம்பிநீள்.
ஸ்தல புராணம் -



தல வரலாறு

  • தற்போது மக்கள் "கோயிலூர்" என்றழைக்கின்றனர். கோயிலூர் என்ற பெயரில் பலவூர்களிருப்பதாலும், இவ்வூர் முத்துபேட்டைக்கு அருகில் இருப்பதாலும் வழக்கில் இத்தலம் "முத்துப்பேட்டை - கோயிலூர்" என்று வழங்கப்படுகின்றனர்.
  • இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு. இதன் காரணமாகவே இறைவன் திருப்பெயர் மந்திரபுரீஸ்வரர் என்று வழங்குகிறது. மற்றும் கடலில் அணை கட்டுவதற்குரிய வழிமுறைகளை இராமபிரான் இப்பெருமானிடம் உசாவிய (கேட்டறிந்த) காரணத்தால் இத்தலம் 'உச்சாத்தானம்' என்று பெயர் பெற்றது. (இவ்வரலாற்றுக்கு ஆதரவாக இவ்வூருக்கு அருகில் இராமன் கோயில், சாம்பவான் ஓடை, அநுமன் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்குநல்லான் பட்டினம் முதலிய ஊர்கள் உள்ளன.) இறைவன் மாமரத்தினடியில் திகழ்வதால் இத்தலம் சூதவனம் என்றும் சொல்லப்படுகிறது.
  • தில்லைக் கூத்தபிரான், இங்கு விரும்பி எழுந்தருளியிருக்கும் காரணத்தால் இது கோயிலூர் ஆயிற்று என்றும் கூறுவர்.

சிறப்புகள்

  • விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி காட்டியருளிய தலம்.
  • கோயிலின் உள் வலத்தில் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.
  • கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் மூன்று திருவடிகளுடனும் காட்சித் தருகிறார்- அழகான உருவம் தரிசிக்கத் தக்கது.
  • கோயிலில் வருணன், இராமர், மார்க்கண்டேயர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
  • முன்மண்டபத்தில் தல வரலாறு வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.
  • மூலவர் - சுயம்பு மூர்த்தி; வெண்ணிறமாக காட்சித் தருகிறார்.
  • விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
  • கல்வெட்டுக்களில் சுவாமியும் அம்பாளும் 'திருவுசாத்தானமுடைய நாயனார், பெரிய நாச்சியார் ' என்னும் திருநாமங்களால் குறிக்கப்படுகின்றனர்.
  • இறையிலியாக நிலங்களும், தோப்புக்களும் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகின்றன.
  • தலபுராணம் - சூதவனப் புராணம் உள்ளது.
  • 1081 ஏக்கர் நன்செய், 1018 ஏக்கர் புன்செய் நிலங்களும் - தென்னந்தோப்புக்களும், 36 கபடிடஸ்களும், 229 மனைக்கட்டுக்களும் இக்கோயிலுக்குச் சொந்தமாக உள்ளன. (இக்கோயில் நிர்வாகத்தில் முத்துப்பேட்டையில் அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெறுகிறது.) - (ஆதாரம் - தலவரலாறு.)
Sri Mandrapureeswarar temple
Sri Mandrapureeswarar temple
Sri Mandrapureeswarar temple's Theertham.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய ஊர்களிலிருந்து முத்துப்பேட்டைக்குப் பேருந்துகள் உள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து மன்னார்குடி சாலையில் 2-கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம்.

Comments

Popular posts from this blog

திருக்கோயில்

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு

கீரை மருத்துவம்